வற்றல் மண்டி

by Dr Senthil kUmar on June 12, 2010

தேவையான பொருட்கள்
மாவற்றல் – 1 கைப்பிடி
கத்தரி வற்றல் – 1 கைப்பிடி
அவரை வற்றல் – 1 கைப்பிடி
கொத்தவரை வற்றல் – 1 கைப்பிடி
தட்டைப்பயறு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 7
புளி – சிறிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு – தேவையான அளவு
கெட்டியான அரிசி கழுவிய தண்ணீர் – 11/2 கப்
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – இரு ஆர்க்கு
வரமிளகாய் – 4
செய்முறை
வற்றல்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிது நேரம் ஊறிய பிறகு குக்கர் அல்லது பாத்திரத்தில் வேகவைத்தெடுக்கவும். தட்டைப்பயறையும் வேக வைத்துக் கொள்ளவும். அரிசி கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். பச்சை மிளகாய் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் உரித்து வைக்கவும்.
ஒரு இருப்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வரமிளகாயைப் பிய்த்துப் போட்டு வதக்கவும். அதிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்து தண்ணீர் வடித்த வற்றல்களையும் தட்டைப்பயறையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின், புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து வற்றி, வற்றல்களில் சார்ந்த பிறகு இறக்கவும். இட்லிக்குத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.
குறிப்பு
செட்டிநாட்டு வீடுகளில், மாங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் சீஸனில் நிறைய வாங்கி வற்றல்களைப் போட்டுக் காய வைத்து ‘ஸ்டாக்’ வைத்துக் கொள்பவார்கள். கல்யாண வீடுகளில் இந்த வற்றல் மண்டி (அரிசி கழுவிய நீரைத் தான் ‘மண்டி’ எனக் குறிப்பிடுவார்கள்) செய்தால், அன்றைய தினம், உறவினர்கள் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவதாகும்.

Related posts:

Leave a Comment

Previous post:

Next post:

Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123